Sunday, January 6, 2008

இப்படிக்கு சாஃப்ட்வேர் இன்ஜினியர்..!

இருந்தாக வேண்டிய அவசியத்தில்
இறங்கா முகங்காட்டும் வாடகைக்கு
இறுக்கத்தோடு இருக்கக் குடியேறுவது
என் விதி..
ஆசையல்ல..!

அறுசுவை அன்னம் கேட்கவில்லை.
அன்போடு ஒரு வாய்ச்சோறுதான் கேட்டோம்..
அம்மா சமையலின்
அருமையை அறியவைத்ததை அன்றி
வேறொன்றுமில்லை..
இங்கே அருந்திச்சுவைக்கும் உணவின் ஆதாயம்..!

அடைய விழைந்த கனவுகளையெல்லாம்
பரணில் போட்டுவிட்டு
அப்பா அடைந்துவிட்ட கடனையடைக்க
தரணி புகழ ரயிலேறினேன்.

விசைப்பலகையிலாடும் விரல்கள் தொட்டு
கசையடி பெற்றேனும்
கணக்கைச் சரி பார்க்கும் மூளை வரை
ஒவ்வொரு கணமும்
எப்பொழுது தொலையுமிந்த
எட்டு மணி நேர இலக்கு
என்ற போராட்டமாய்..!

காசில்லாமல் கார்டைத் தீட்டும்
ட்ரீட்டுகளும்,
தொட்டவை தொண்ணூறுகளுக்கும்
பார்ட்டிகளும்,
செலவழிப்பதற்கு வழி செய்யும்
செய்வினைகளல்ல..
கருமமாம்
கார்ப்பரேட் கல்ச்சரது
காட்டிக்கொடுத்த
கைவினைகள்..!

அகவை இருபதில்
ஆயிரங்கள் இருபது ஈட்டியதை
இசைபாடி வாழ்த்தாவிடினும்,
"நாகரீகக் கோமாளிகள்" என்று - வசமாய்
வசைபாட வந்துவிட்டனர்
எம் சகோதரர்கள்..(?!)

புரிந்து கொள்ளுங்கள்
தயைபுரிந்து..
எங்களுக்கும் இருக்கிறதென்று,
இதயமென்ற ஒன்று..!

உறவுகளைத் துறந்திருப்பினும்,
வாழ்வியலின் சிற்சில
வரைமுறைகளை மறந்திருப்பினும்,
உயிர்த்திருக்கிறோம் நாங்கள்..
பொசுக்கியெடுக்கும்
பொருளாதாரப் புகைச்சல்களினூடேயும்
எங்களை ஈன்றெடுத்து ஆளாக்கிய,
நீங்கலா உறவுகளின்
நிதிநிலையை
மேம்படுத்தத்தான்
மேற்கூறியவையனைத்தும் என்பதால்!

வெல்க பாரதம்!

No comments: